ஜாமீனில் வெளியே இருக்கும் ராமதாஸுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை
ஏப்ரல் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்திற்கு பின்னால் இருந்தவர்களை கண்டித்து கடந்த மாதம் 30ம் தேதி விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 12 நாட்கள் சிறையில் இருந்த பிறகு அவர் கடந்த வாரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்ததும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் இது குறித்து பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமதாஸ் ஜாமீனில் வெளி வந்த பிறகு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.