மெல்போர்ன் நகரில் ஈழ இன அழிப்பு நினைவுக் கண்காட்சி
மெல்போர்ன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தமிழர் இன அழிப்பு நினைவு புகைப்படக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
மே 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தக் கண்காட்சி, தமிழ் அகதிகள் கவுன்சில்கள் அமைப்பைச் சேர்ந்த ரான் கய் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான ஈழத் தமிழ் மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை ஆஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஆஸ்திரேலிய ஜனநாயகத் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஸ்டீவ் காம்பெல் தொடக்க உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், இப்படங்களைப் பார்க்கும்போது இலங்கையில், இறுதிப் போர்க்காலத்தில் நடந்த கொடுமைகள் தெளிவாகத் தெரிகின்றன.
மனிதர்கள் எவருக்குமே அதிர்ச்சியளிக்கக்கூடிய இச்சாட்சியங்களை இவ்வளவு நாளும் அறியாமல் இருந்திருக்கிறோம். இவை ஆஸ்திரேலிய மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இங்குக் கூடியிருக்கும் அனைவரும் உங்களது தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இது தொடர்பாகக் கதையுங்கள். தொடர்ச்சியான அழுத்தங்கள் அவர்களைச் சரியான வழிக்குக் கொண்டுவரும். ஏனென்றால் இவ்வுண்மைகள் தெரியாமலேயே ஏராளமான அரசியல்வாதிகள் உள்ளனர் என்றார்.
பிரபல வழக்கறிஞரும், தமிழர் உரிமைப்போராட்டம் மற்றும் மனிதவுரிமைகள் தொடர்பான தீவிர செயற்பாட்டாளருமான ராபர்ட் ஸ்டேரி பேசுகையில், ஆஸ்திரேலிய அரசு, எவ்வாறு தமிழினம் மீதான பயங்கரவாதத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மூவரைக் கைதுசெய்தது, அதன்மூலம் எவ்வித உதவிகளும் விடுதலைப் போராட்டத்துக்கோ தமிழ்மக்களின் மனிதநேயப் பணிக்கோ கிடைக்கவிடாமல் தடுப்பது, ஆஸ்திரேலியத் தமிழர்களை மிரட்டி வைப்பது, அதன்மூலம் ஏனைய நாடுகளும் இதைப் பின்பற்றி தமிழர் மீதான தமது அழுத்தங்களைப் பிரயோகித்து தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முடக்கும் வகையில் பணியாற்றியது என்பதை விளக்கிப் பேசினார்.
விக்டோரியா மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான, தொழிற்கட்சியைச் சேர்ந்த டான் நாடெல்லா பேசுகையில், இதுபோன்ற கண்காட்சிகள் பலரின் கண்களைத் திறக்கும்; இதுவரை தமிழர் இனவழிப்பைப் பற்றி அறியாத பாமர மக்கள் இதன்மூலம் தெளிவு பெறுவர்; இது போன்ற கண்காட்சிகள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக தமிழ் அகதிகள் கழகத்தைச் சேர்தவரும் பிரபல ஊடகவியலாளருமான டிரெவர் கிரான்ட், முள்ளிவாய்க்கால் பேரழிவின் சாட்சியங்கள் சிலவற்றை வாசித்த அவர், இப்புகைப்படக் கண்காட்சியின் முக்கியத்துவம் பற்றியும் இவை போன்ற கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கியதோடு இந்நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மெல்போர்ன் நகரின் முக்கிய இடத்தில் நடைபெறும் இக்கண்காட்சி எதிர்வரும் மே மாதம் 30 ஆம் நாள்வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.