திருப்பதி ஏழுமலையானுக்கு 4143 ஏக்கர் நிலம் சொந்தம்... தனி டிரஸ்ட் உருவாகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பணம், நகை, நிலம் போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக உள்ள தேவஸ்தான சொத்துகளை ஓராண்டு காலம் சர்வே செய்யப்பட்டது. அதன்படி பக்தர்கள் வழங்கிய நிலங்கள் 4,143 ஏக்கர் இருப்பது தெரியவந்தது. இந்த நிலங்களுக்கு 2010ம் ஆண்டு நிலவரப்படி அரசு மதிப்பீட்டில் ரூ.33,447 கோடியாக இருந்தது. இதில் ஆந்திராவில் மட்டும் ரூ.33,149 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.299 கோடியாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை பக்தர்கள் 100 ஏக்கர் மதிப்புள்ள நிலங்களை தேவஸ்தானத்துக்கு வழங்கியுள்ளனர். நிலங்களின் மொத்த மதிப்பு தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என தேவஸ்தான நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற அசையா சொத்துகளை பெறுவதற்கு தனி டிரஸ்ட் அமைத்தால் மேலும், பல பக்தர்கள் நிலங்களை அதிக அளவில் தர முன் வருவார்கள் என தேவஸ்தான தலைமை செயல்அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இதையொட்டி, பூதேவி, பிருத்வி, சப்தகிரி ஆகிய 3 பெயர்களில் ஏதாவது ஒரு பெயரில் டிரஸ்ட் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய டிரஸ்ட் அமைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தலைமை செயல் அதிகாரி எல்.வி.சுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.