மான் வேட்டையாடிய ரிடையர்ட் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் கைது: வனத்துறை அதிரடி
சேலம்: மான்களை வேட்டையாடிய ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வீரமணி உள்ளிட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வீரமணி (60). அவருடன் சேர்ந்து மகேந்திரன் (32), பிரபாகரன் (25), மோகன் (23) ஆகியோர் கள்ளக்குறிச்சி, மூங்கில்துறைப்பட்டு, வானாபுரம் பகுதிகளில் வனவிலங்குகளை கடந்த சில நாட்களாக வேட்டையாடி வந்துள்ளனர்.
இந்த தகவல் மாவட்ட வன அலுவலர் நாகநாதனுக்கு கிடைத்தது. இதையடுத்து மான் வேட்டையாடுவர்களை பிடிக்க உதவி வன ஆலுவலர் மனோகரன், செங்கம் வனச்சரக அலுவலர் ஜெயராஜ், ராமநாதன், வனக்காப்பாளர்கள் தாண்டவராயன், சிவக்குமார், அய்யோதி, சதாசிவம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் வனப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்செங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக வந்த டாடா இன்டிகா காரை மடக்கி பரிசோதனையிட்டனர். அப்போது 2 ஆண் மான்கள், 3 பெண் மான்கள் என மொத்தம் 5 மான்களை வேட்டையாடி கொன்று கார் டிக்கியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காரில் இருந்த வீரமணி, மகேந்திரன், பிரபாகரன், மோகன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, பேட்டரி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.