’கிரிக்கெட் சூதாட்டம்’ எனும் விஷச் செடி: தொடர் போராட்டத்தில் குதிக்கும் கி.வீரமணி
தொடரும் ஐபிஎல் சூதாட்ட கைதுகளின் எதிரொலியாக கி.வீரமணி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
குபேர பிசினஸ்...
ஐ.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
அதிர்ச்சித் தகவல்...
சென்னையில் கைது செய்யப்பட்ட சூதாட்டக் கும்பலின் தலைவர் பிரசாந்த் என்பவர் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது!! 1997ஆம் ஆண்டிலிருந்தே அவர் இந்த கிரிக்கெட் சூதாட்டத் தொழிலை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாம்..ஜாம்... என்று நடந்த பிசினஸ்....
16 ஆண்டுகளாக இது எவ்வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ‘ஜாம் ஜாம்' என்று வேகமாக நடைபெற்று, காவல்துறை துணையோடு ஆட்சியிலிருப்போர் பலரின் கூட்டுறவோடு, குறிப்பாக கிரிக்கெட் ‘ஜாம்பவான்' (ஜாம்பவன் என்றால் அனுமாரின் தந்தை - புராணப்படி)களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வந்துள்ளது என்பது தானே பொருள்?
ஐ..பி.எல். மட்டுமல்ல...
அப்போது 16 ஆண்டுகளுக்குமுன் இந்த அய்.பி.எல். ஆட்ட முறை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதே திட்டமிட்டே வெற்றி தோல்விகள் உடன்படிக்கை அடிப்படையில் இச் சூதாட்டங்கள் முன்பும் நடந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்?
முன்னாள் மத்திய அமைச்சருக்கும் தொடர்பாம்..
தமிழ்நாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இவருக்கு வலக்கரமாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. சாதாரண டிராவல்ஸ் நடத்திய இவர் பல கோடிகளில் புரளத் துவங்கினாராம்!
'கிரிக்கெட் சூதாட்டம்' எனும்விஷச் செடி...
"கிரிக்கெட் சூதாட்டம்'' விஷச் செடிகளாக உலகம் முழுவதும் பரவி விட்டது. என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன்மூலம் அதை அழித்து விட முடியாது என்கிறார் இந்தப் பிரசாந்த். இவருக்கு சென்னை சூதாட்டக் கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்!
திசை திருப்பலா...?
மத்திய அரசு அமைச்சரும் கிரிக்கெட் அய்.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதாகக் கூறுவதே, ஒரு திசை திருப்பல் ஆகும்! இப்போதுள்ள சட்டங்கள் போதாதா? ஒவ்வொரு ஐ.பி.எல். அணி விளையாட்டுக்காரர்களையும் கண்காணிக்க தனித்தனி ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.அய். தலைவர் கூறியிருப்பதும் நடைமுறைக்கு உகந்த தடுப்பு முறையாகத் தெரியவில்லை;
கை விரிப்பு...
அவரே எங்களால் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது என்றும் கை விரித்து கருத்துக்கூறிய நிலையில், இந்த வியாபாரத்தை எப்படியும் நடத்தி லாபம் பெறவே முதலாளித்துவ (கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள்) சக்திகள் முயற்சிக்கும்.
ஏலம் போகும் விளையாட்டுக்காரர்கள்...
முதற்கட்டமாக இந்த அய்.பி.எல். என்ற விளையாட்டுக்காரர்களை ஆடு, மாடுகளை ஏலம் போட்டு வாங்குவதைப் போன்ற மறைமுகக் கொத்தடிமை முயற்சிக்கு - மனித உரிமை மீறல், ஊழல், சூதாட்டம், கருப்புப் பணம் லஞ்ச லாவண்யம் எல்லாவற்றுக்கும் ஊற்றாக விளங்கும் இந்த அய்.பி.எல். என்ற கிரிக்கெட் விளையாட்டையே முற்றாக உடனடியாக தடை செய்ய வேண்டும்; இதுதான் ஒரே வழி.
கண்டன ஆர்ப்பாட்டம்...
இதற்காக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் வரும் 24ஆம் தேதி வெள்ளியன்று எழுச்சியுடன் நடத்தவிருக்கிறது. அதற்கு ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஈடுபட முன் வர வேண்டும்.
தொடர் போராட்டம்...
நமது கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கும் நமது அறப்போர் அதோடு முடிவடையாது; அது தடை செய்யப்பட்டு ஒழிக்கப்படும் வரை பிரச்சாரப் போர் - அறப் போர் - தொடர் மழையாகப் பெய்வது உறுதி! உறுதி!! என இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.