தனிக்குடும்பங்களால் வந்த வினை: 60, 80 வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டிய அவலம்
பெங்களூர்: 70 சதவீத மூத்த குடிமக்கள் உழைத்து சாப்பிட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது ஒரு புதிய கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
மக்கள்தொகை ஆய்வு மையம், பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் சோஷியல் அன்ட் எகனாமிக் சேன்ஞ்ச் ஆகியவை இன்ஸ்டிடியூட் ஆப் எகனாமிக் குரோத் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயன்ஸுடன் சேர்ந்து ஒரு கணக்கெடுப்பை எடுத்தது. தமிழ்நாடு, கேரளா, ஒடிஷா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 10,604 பேரிடம் மூத்த குடிமக்கள் தள்ளாத வயதிலும் தானே உழைத்து உண்ண வேண்டிய நிலையில் இருப்பது குறித்து கணக்கெடுத்தது.
குழந்தைகள் பெற்றவர்களை வயதான காலத்தில் கவனிக்காமல் தவிக்க விடுவதால் மூத்த குடிமக்கள் தாங்களே உழைத்து வாழ வேண்டி இருக்கிறது.
70 சதவீதம் பேர்
தள்ளாத வயதிலும் 70 சதவீதம் பேர் தாங்களே உழைத்து சாப்பிடுவது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஒன்றும் இஷ்டப்பட்டு வேலைக்கு போகவில்லை. வேறு வழியில்லாமல் போகின்றனர்.
பிள்ளைகளை நம்பி 49 சதவீதம் பேர்
மூத்த குடிமக்களில் 49 சதவீதம் பேர் தங்கள் மகன்களை நம்பியும், 15 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் துணையை நம்பியும் இருக்கின்றனர். மேலும் 25 சதவீதம் பேர் யாரை நம்பியும் இல்லை. அவர்கள் வயதான காலத்தில் கூட உழைக்க வேண்டி இருக்கிறது.
80 வயதிலும் வேலை
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 42 சதவீத ஆண்கள் 60 வயதை தாண்டியும் வேலைக்கு செல்கின்றனர். மேலும் 13 சதவீத ஆண்கள் 80 வயதைத் தாண்டிய பிறகும் வேலை பார்க்கின்றனர்.
கூட்டுக் குடும்பங்கள் இல்லை
கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிப் போனதும், தனிக் குடும்பங்கள் தலை தூக்கியதும் தான் வயதானவர்கள் ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் உழைத்து சாப்பிட வேண்டி உள்ளதற்கு காரணம்.