காந்தி தாத்தா ரத்தம் கடை சரக்கானதே?.. என் ரத்தம் கொதிக்கிறது - வேதனையில் கொள்ளுப்பேரன்
டெல்லி: 'மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி உள்ளிட்ட பொருட்கள் கடைசரக்காக ஏலம் விடுவதை தடுக்க முடியவில்லையே என என் ரத்தம் கொதிக்கிறது' என காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி வேதனையோடு கூறியுள்ளார்.
நேற்று, காந்தியின் ரத்தம், செருப்பு போன்ற உடமைகள் லண்டனில் ரூ.2.5 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டன.
இது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி. மேலும் அவர் கூறியதாவது...
கடை சரக்கானது...
தேசப்பிதா காந்தியின் ரத்தம் வேற்று நாட்டில் கடை சரக்கைப் போல் ஏலம் விடப்பட்டதை அறிந்து எனது ரத்தம் கொதிக்கிறது.
வேதனை...
இந்த ஏலத்தை தடுக்கவோ, ஏலத்தில் பங்கேற்று எனது மூதாதையரின் நினைவுகளை பாதுகாக்கவோ முடியவில்லையே என வேதனைப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக இதற்கான அரசியல் மற்றும் ராஜாங்க அதிகாரம் என்னிடம் இல்லை.
வெளிநாட்டில் இப்படி இல்லை...
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தேசத் தலைவர்களின் உடமைகள் இதே போன்று ஏலம் விடப்பட்டால், அவற்றை அந்நாட்டு அரசாங்கமே ஏலத்தில் எடுத்து பாதுகாத்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
எனது இயலாமை....
காந்தியின் மரபணுவை தாங்கி நிற்கும் நான், அவரது ரத்தம் ஏலம் விடப்படுவதை தடுக்கும் சக்தி இல்லாமல் போனதை எனது இயலாமையாகவே கருதுகிறேன்.
நான் மலிவான மனிதன்...
அவரது ரத்தம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஏலம் போவதை வைத்து பார்க்கும் போது, நான் எவ்வளவு மலிவான மனிதன்? என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தீவிரப்பிரச்சாரம்...
சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் காந்தியின் உடமைகள் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்ட போது அந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என ஊடகங்களின் வாயிலாக நான் தீவிரப் பிரச்சாரம் செய்தேன்.
என் வேண்டுகோள்...
மத்திய அரசும், பிரதமரும் இதற்கு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், எனது கோரிக்கைக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக, ஏலம் விடப்பட்ட பொருட்களின் மதிப்பு பன்மடங்கு கூடிவிட்டது. இது ஏல நிறுவனத்துக்கு தான் லாபமாக அமைந்தது.
வார்த்தை தவறிய மல்லையா...
நியூயார்க்கில் நடந்த ஏலத்தின் போது அப்பொருட்களை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லைய்யா ஏலத்தில் எடுத்தார். இந்திய மக்களுக்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கப்போவதாக விஜய் மல்லைய்யா அறிவித்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை. இன்றுவரை காந்தியின் பொருட்கள் மோனாக்கோ நாட்டின் மாண்டேகர்லோ நகரில் உள்ள விஜய் மல்லையாவின் வீட்டில் தான் உள்ளன என இவ்வாறு துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.