ம.பி.யில் 7 வயது சிறுமியை கடத்தி, கற்பழித்துக் கொன்ற பெரியப்பா மகன்
போபால்: மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது தந்தையின் சகோதரரின் மகன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி கோடை விடுமுறையை கழிக்க மால்ஹர்கார் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு சிறுமியின் தந்தையின் சகோதரர் மகன் ஹனி ஓத்வால்(17) வந்துள்ளார். பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று, கற்பழித்து அவரது குரல் வளையை நெறித்துக் கொன்று தண்ணீர் தொட்டியில் உடலை வீசிவிட்டார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. மறுநாள் காலை சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகில் உள்ள உறவினர் வீட்டு தண்ணீர் தொட்டியில் சிறுமியின் உடல் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹனியை கைது செய்தனர்.
இது குறித்து எஸ்.பி. எம்.எஸ். வர்மா கூறுகையில்,
பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஹனி கற்பழிக்கும் எண்ணத்துடன் தனது அறைக்கு தூக்கிச் சென்றார். சிறுமி கத்தியதால் அவரை கொன்று உடலை தனது வீட்டு பேஸ்மென்ட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டார் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்தது தங்களுக்கு தெரியாது என்றும், அந்த நேரத்தில் தாங்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் ஹனியின் பெற்றோர் போலீசில் தெரிவித்துள்ளனர்.