பிரசாந்த் உள்பட 3 தரகர்கள் வீடுகள் சீல்' வைப்பு :முக்கிய ஆவணங்கள் சிக்கின
சென்னை: ஐ.பி.எல். சூதாட்டத்தின் முக்கிய தரகர்களான பிரசாந்த், சஞ்சய் பாவ்னா மற்றும் கிட்டி என்ற உத்தம சி ஜெயின் ஆகியோரின் வீடுகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பல முக்கிய கிரிக்கெட் சூதாட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரசாந்த் நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டான். பிரசாந்த் தான் கிரிக்கெட் சூதாட்ட தரகர்களின் தலைவன் என்று சொல்லப்படும் எஇலையில், அவருடன் நருங்கிய தொடர்புடைய தரகர்களான சஞ்சய் பாவ்னா, கிட்டி என்ற உத்தம் சி ஜெயின் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த இரண்டு தரகர்களும் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த 3 பேரின் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றும் இன்றும் சோதனை நடத்தி சீல வைத்தனர்.
டி.எஸ்.பி. ராஜா சீனிவாசன் தலைமையில் அயனாவரத்தில் உள்ள பிரசாந்த் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், ரூ. 20 லட்சம் ரொக்கப் பணம், 2 லேப்-டாப், செல்போன்கள் ஆகியவை சிக்கியது. திறக்க முடியாத அறையொன்றை இன்று பிரசாந்த்தை நேரில் அழைத்து வந்து திறந்தனர்.
அதில் சோதனையிடப்பட்டதில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கான முக்கிய ஆதாரங்களாக அணிகளின் பெயர்கள் கொண்ட ரகசிய குறுயீடுகள், பண பட்டுவாடா ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
வேப்பேரி சம்பத் சாலையில் உள்ள பி.பி.சி. அபார்ட்மெண்ட்டில் 2 -வது மாடியில் உள்ள மற்றொரு தரகர் கிட்டி என்ற உத்தம் சி ஜெயின் வீடு டி.எஸ்.பி. பரணிகுமார் தலைமையில் சோதனை செய்யப்பட்டது..
அங்கு ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம், ரூ. 5 லட்சம் வீதம் பணம் எழுதி நிரப்பப்பட்ட நிலையில் 10 செக்குகள், செம்மஞ்சேரியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பிளாட்டுக்கான தஸ்தாவேஜூகள், 10 சிம்கார்டு, 2 லேப்-டாப், 1 செல்போன், சிம்கார்டுகள் ஆகியவை சிக்கியது.
தரகர் சஞ்சய் ராவ்னா வீடு கெல்லிஸ் சந்திப்பில் பழைய உமா தியேட்டர் அருகில் பிரான்சன் தெருவில் உள்ளது. வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கோர்ட்டு அனுமதியுடன் பூட்டை உடைத்து சோதனை நடத்தினார்கள்.இந்த வீ்டை அவர் இந்த ஆண்டுதான் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.