ராமதாஸுக்கு பை பாஸ் ஆபரேஷன் முடிந்து நலமாக உள்ளார்: யாரும் சந்திக்க வர வேண்டாம்- பாமக
மரக்காணம் கலவரத்தை தூண்டி விட்டவர்களை கண்டித்து விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து கடந்த 20ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு 20-ஆம் தேதி இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது தீவிர கவனிப்புப் பிரிவில் உள்ள அவர் உடல்நலம் தேறி வருகிறார். அவர் நலமுடன் உள்ளார். மருத்துவர்களுடன் உரையாடினார். அதே நேரத்தில் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவரை சந்திப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினரும், நண்பர்களும் மருத்துவமனைக்கு வருவதை தயவு செய்து தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.