பார்வையோ 5%... பெற்ற மதிப்பெண்களோ 96%: ம.பி மாணவியின் சாதனை
போபால்: மத்திய பிரதேச மாநில பள்ளி இறுதியாண்டு தேர்வுவில் 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பார்வையற்ற மாணவி சிருஷ்டி திவாரி சாதனை புரிந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் பார்வையற்ற சிருஷ்டி திவாரி(16) என்ற மாணவி 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனைக்கு எதுவுமே தடையல்ல என்பதை நிரூபித்துள்ள சிருஷ்டி திவாரி, மாநிலத்தில் 4வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி பணியில் சேர்வதே அவரது எதிர்கால லட்சியமாம்..
11 முறை ஆபரேஷன்...
பிறக்கும் போதே இரு கண்களிலும் புரையோடு பிறந்தவர் சிருஷ்டி திவாரி. இதற்காக 11 முறை கண்களில் ஆபரேஷன் செய்தும் பலன் இல்லையாம்.
5 சதவீத பார்வை...
வெறும் 5 சதவிகிதம் பார்வைத் திறன் மட்டுமே கொண்டு 'பிரெய்லி' முறை பாடப்பிரிவில் தனது கல்வியை ஆரம்பித்த சிருஷ்டி, ஆரம்பம் முதலே சிறந்த மாணவி தானாம்.
முதல் மாணவியாக வர வேண்டும்...
பல்வேறு பரிசுகளையும், அரசின் கல்வி உதவித் தொகையையும் பெற்ற சிருஷ்டியின் லட்சியம் பள்ளி இறுதியாண்டு தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்பதே.
மனப்பாடம் செய்து....
நாள்தோறும் குறைந்தது 5 மணி நேரம் படிக்கும் சிருஷ்டிக்கு அவரது தாத்தா, பாட்டி மற்றும் மாமா ஆகியோர் பாடங்களை பலமுறை வாசித்துக் காட்டுவார்களாம். காதில் கேட்பவற்றை அப்படியே மனப்பாடம் செய்து கொள்வாராம் சிருஷ்டி.
வெற்றி... வெற்றி...
தற்போது, உதவியாளரின் துணையுடன் இறுதியாண்டு தேர்வை எழுதி 500க்கு 481 என உயரிய மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் சிருஷ்டி.
பாராட்டு மழை...
மத்திய பிரதேச முதல் மந்திரி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் என பலரது பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார் சிருஷ்டி.