களக்காடு மலையில் காட்டுத் தீ: அரிய வகை மூலிகைகள் எரிந்து சாம்பல்
களக்காடு: கடும் வெயிலால் களக்காடு மலை பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதில் ஏராளமான அரிய வகை மூலிகைகள் எரிந்து சாம்பலாயின.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயிலின் தாக்கத்தால் கடும வறட்சி நிலவி வருகிறது. அருவி மற்றும் நீரோடைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. வெப்பம் அதிகமாக நிலவுவதால் காட்டு தீ பரவும் அபாயம் நிலவி வந்தது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திருக்குடி வனச்சரகம் திருவண்ணாமலை மொட்டை பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
தகவல் அறிந்த களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை கட்டுபடுத்துவதற்காக வனப்பகுதிக்குள் விரைந்துள்ளனர். அவர்கள் தீப்பிடித்த பகுதிக்கு சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதனால் மலை அடிவார மக்கள் பீதியில் உள்ளனர்.