வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம், செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
வைகாசி விசாகம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தின் முருகன் அவதரித்தார் என்கின்றன புராணங்கள். எனவே ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் முருகன் கோவில்களில் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தில் அவதரித்த காரணத்தால் முருகனுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வைகாசி விசாக தினத்தில் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்த வந்து முருகனுக்கு அபிசேகம் செய்வது வழக்கம். நாளை வைகாசி விசாகம் என்பதால் பல ஊர்களில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூரில் திருவிழா
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாரதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வனையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடைகிறார். அங்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்ததும் சுவாமி அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்க தேரில் எழுந்தருளி கோயிலை அடைகிறார்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வனையுடன் தங்க தேரில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேருகிறார். அங்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்ததும் இரவில் முனி குமாரருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு கோயிலை அடைகிறார். இவ்விழாவில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்து வருகின்றனர்.