பாஜக பிரமுகர் எம்.ஆர் காந்தி மீது தாக்குதல் -3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜ பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்ட பாஜ மூத்த தலைவர் எம் ஆர் காந்தி கடந்த 21ம் தேதி வாக்கிங் சென்றபோது 4 பேர் கொண்ட மர்ம் கும்பல் இவரை சராமரியாக வெட்டி வி்ட்டு பைக்கில் தப்பி சென்றது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஷாலி, நாகர்கோவில் கோட்டாறு இளங்கலை பகுதியை சேர்ந்த பிரபு என்ற அம்சா, திருவிதாங்கோடு பரக்கத் தெருவை சேர்ந்த அப்துல் சமீம், கோட்டாறை சேர்ந்த ஷாஜி ஆகிய 4 பேரை நேசமணி நகர் போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். கோட்டாறு பகுதியை சேர்ந்த நவாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
இதில் முகமது ஷாலியை பெங்களுரு குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இவர் அல் உம்மா இயக்கத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மேற்படி மூன்று பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். முகமது ஷாலி விசாரணையில் இருப்பதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவில்லை என்று கூறப்படுகிறது.