குடிநீர் பிரச்சனை: அதிமுக எம்.எல்.ஏ. பி.ஜி.நாராயணன் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
ஈரோடு: அதிமுக எம்எல்ஏ பி.ஜி.நாராயணன் வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அண்ணா நகரில் உள்ளது பவானி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பி.ஜி.நாராயணனின் வீடு உள்ளது. பவானியில் கடந்த சில நாட்களாக பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் குடிதண்ணீர்க்கு பொது மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
இது குறித்து சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம் போன்றவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனாலும், குடிநீர் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை. மாறாக நாளுக்கு நாள் கடுமையானது.
இதனால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பொது மக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்க நாராயணன் போதிய அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதனால் பெண்கள் மற்றும் ஆண்கள் என நூற்றுக் கணக்கானோர் பவானி தொகுதி நாராயணனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்ககளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.