தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் மாற்றம் ஏன்?: பரபரப்பு தகவல்
தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் திடீரென்று அப்பதவியில் இருந்து மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக தலைவராக மாற்றப்பட்டுள்ளார். மாநில அரசில் தலைமை செயலாளருக்கு அடுத்து முக்கியமான பதவி உள்துறை செயலாளர் பதவி.
தமிழக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து துறை, மதுவிலக்கு ஆகிய பிரிவுகள் உள்துறை செயலாளருக்கு கீழ் இயங்கும் துறைகளாகும். மேலும் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்துறை செயலாளருக்கு மட்டுமே உண்டு. இப்படிப்பட்ட உயர் அதிகாரம் படைத்த பதவியில் இருந்து ராஜகோபால் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, உள்துறை செயலாளர் ராஜகோபால் மிக கண்டிப்பானவர் என பெயர் எடுத்தவர். ஆனால், தான் சொல்வதை தான் மற்ற அதிகாரிகள் கேட்க வேண்டும் என்று கருதுபவர். அவருக்கும் டி.ஜி.பி. ராமானுஜத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பனிப்போர் நடத்து வந்தது.
இதனால் உள்துறையில் ஏராளமான பைல்கள் தேங்கத் தொடங்கின. குறிப்பாக, போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் கடந்த 4 மாதத்துக்கு மேலாக உள்துறையில் தேங்கியுள்ளது. இது தவிர மரக்காணம் கலவர விவகாரத்தில் தமிழக உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் முறையாக செயல்படவில்லை என்றும், கடலூரில் நாம் தமிழர் இயக்கம் நடத்திய கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் தமிழக அரசுக்கும், உள்துறைக்கும் முன் கூட்டியே தெரியமால் கலந்து கொண்டு டெல்லி வழியாக காஷ்மீர் சென்று விட்டார். இந்த தகவல் முதலவர் ஜெயலலிதாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், யாசின் மாலிக் பேச்சு குறித்து தமிழக தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறையில் இருந்து விளக்கம் கேட்டதாகவும், இதனால் தான் உள்துறைச் செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.