எவரஸ்ட் சிகரத்தில் ஏறி 80 வயது ஜப்பானிய தாத்தா புதிய சாதனை
காத்மாண்டு: 80 வயது ஜப்பானியர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய வயதானவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
எவரஸ்ட் சிகரத்தில் நல்ல தட்பவெட்ப நிலை உள்ளதால் பலரும் அதில் ஏறி வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த 80 வயது யூசிரோ மியூரா இன்று காலை எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். இதன் மூலம் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய மிகவும் வயதானவர் என்ற பெருமையை மியூரா பெற்றுள்ளார்.
முன்னதாக அவர் தனது 70 மற்றும் 75வது வயதில் இரண்டு முறை எவரஸ்ட்டில் ஏறி சாதனை படைத்திருந்தார். முன்னதாக நேபாளத்தைச் சேர்ந்த மின் பகதூர் செர்சான் கடந்த 2008ம் ஆண்டில் தனது 76வது வயதில் எவரஸ்ட் சிகரத்தில் ஏறியது தான் ஒரு முதியவர் படைத்த சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது மியூரா முறியடித்துள்ளார்.
ஆனால் தற்போது 81 வயதாகும் செர்சான் அடுத்த வராம் மீண்டும் எவரஸ்ட்டில் ஏறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையேறும் தாத்தா
மியூரா தனது மகன் கோடாவுடன் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹய்யா, நான் மலை ஏறிட்டேன்
எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த உடன் மியூரா தனது குடும்பத்தாருடன் சாட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டு நான் மலையேறிவிட்டேன் என்று தெரிவித்தார்.
வயது தடையல்ல
80 வயதில் என்னால் எவரஸ்ட்டில் ஏற முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த வயதில் சிகரம் தொட்டதை விட வேறு என்ன மகிழ்ச்சி உள்ளது என்று மியூரா தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.