ஸ்ரீசாந்தின் வீட்டுக்குள் நுழைந்த டூப்ளிகேட் போலீஸ் சச்சின் கைது!
கேரள மாநிலம் இடபள்ளி அருகே உள்ள ஸ்ரீசாந்தின் வீடு. இந்த வீட்டுக்கு நேற்று சென்ற ஒரு நபர் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் தாம் மும்பை போலீஸ் என்றும் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்தின் பெற்றோரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் இந்தியில் கேட்டிருக்கிறார். இதையடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்ட அந்த நபர் கேட் அருகேயே தாம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு மிக நெருக்கமானவர்..ஸ்ரீசாந்தைக் காப்பாற்ற உதவ முடியும் என்று கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள், உள்ளூர் போலீசாருக்க்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். போலீசார் விரைந்து சென்று அந்த நபரைக் கைது செய்தனர். அவரது பெயர் நீலேஷ் ராமச்சந்திரன் ஜக்தப் என்ற சச்சின் என தெரியவந்துள்ளது. மேலும் மும்பை-கன்னியாகுமரி ரயிலில் வந்ததற்கான டிக்கெட்டும் அவரிடம் இருந்துள்ளது. இந்தி பேசக் கூடிய அந்த மர்ம நபர் யார்? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.