மத்திய அரசைக் கண்டித்து மறியல்: ஜி.ரா. உள்ளிட்ட 1,000க்கும் மார்க். கம்யூ. கட்சியினர் கைது
சென்னை: மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும், பாலியல் வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் போராட்டம்
சென்னையில் குறளகம், கிண்டி ரெயில் நிலையம், உள்பட 9 இடங்களில் மறியல் போராட்டம் நடை பெறும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. தடையை மீறி போராட்டம் நடத்த தொண்டர்கள் திரண்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், ஆவடி, கிண்டி, செங்குன்றம், மணலி, திருவொற்றியூர், குன்றத்தூர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 9 இடங்களில் சிபிஎம் கட்சியினரின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.