கங்கிராட்ஸ் மாரீஸ்வரி!... உங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது - 108ல் பிரசவித்த பெண்
மதுரை: மதுரை அருகே 108 ஆம்புலன்ஸ் வேனில் வைத்து ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தது. அப்பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.
மேலூர் சிவன்கோவில் அருகே பிளாட்பாரத்தில் குடிசை போட்டு வசித்து வருபவர் முருகன் (35), கூலி தொழிலாளியான இவரது மனைவி மாரீஸ்வரி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாரீஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் குறைந்தது. இன்று காலை மீண்டும் வலி அதிகரித்தது. இதையடுத்து அங்கிருந்தோர் 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்னர். ஆம்புலன்ஸ் வேனும் வந்தது.
ஆம்புலன்ஸில் மாரீஸ்வரி ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே வலி அதிகமாகி அவருக்குப் பிரசவம் ஏற்பட்டது. வேனிலேயே அவருக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. முதலி்ல் பெண் குழந்தையும், அடுத்து ஆண் குழந்தையும் பிறந்தன. இரண்டுமே நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டன.
இந்த வேனில் இதுவரை 50 பெண்களுக்குப் பிரசவம் நடந்துள்ளதாம். இதை அந்த வேனின் டிரைவர் பெருமையுடன் கூறினார்.