1 லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம்... சல்மான் குர்ஷித் சவுதி அரேபியா பயணம்
‘உள் நாட்டினருக்கே வேலை' என்ற புதிய சட்டத்தை அண்மையில் சவுதி அரேபியா அரசு இயற்றியது. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தப்போவதாக அரசு அறிவித்தது. அதன்படி அங்குள்ள நிறுவனங்களில் வேலையில் இருக்கும் வெளிநாட்டினரை நீக்கி விட்டு அந்த இடத்தில் சவுதி இளைஞர்களை நியமிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து சட்ட விரோதமாக அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை சவுதி போலீசார் சேகரிக்க தொடங்கினர். சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஜூலை 3ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடுவுக்கு பின்னர் சவுதியை விட்டு வெளியேறாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
லட்சக்கணக்கான இந்தியர்
சவுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். புதிய சட்டம் அமலுக்கு வந்திருப்பதை தொடர்ந்து இவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்சிட் பாஸ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
57 ஆயிரம் இந்தியர்
இதுவரை பெறப்பட்ட 75 ஆயிரம் விண்ணப்பங்களில் 57 ஆயிரம் இந்தியர்களுக்கு எக்சிட் பாஸ் வழங்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த எக்சிட் பாஸ்களை நாள் ஒன்றுக்கு 500 என்ற அளவில் சவுதி அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள். இந்த வேகத்தில் சென்றால் ஜூலை 3க்குள் சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்களை மட்டுமே சவுதி அதிகாரிகளில் சரிபார்க்க முடியும். இதனால் ஜூலை 3க்கு பிறகு 1 லட்சம் இந்தியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்தியர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பிரச்னை குறித்து சவுதி இளவரசரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சல்மான் குர்ஷித் வெள்ளிக்கிழமை அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.