நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மகன்கள் மீது வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் மகன்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்காசியில் நெல்லை மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 3 கோடி நிதி மாவட்ட கழகம் சார்பில் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லையில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அப்பாவு கார் டிரைவர் அய்யப்பன், மாவட்ட திமுகவினர் மிக குறைவாக நிதி கொடுத்ததாக கூறினார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் மகன்கள் சங்கர், முத்துராமலிங்கம், அவர்களின் கார் டிரைவர் இசக்கி பாண்டி இதை கண்டித்ததாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து அவர்கள் அடியாட்கள் சிலருடன் சேர்ந்து அய்யப்பனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அய்யப்பன், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கருப்பசாமி பாண்டியனின் மகன்கள் சங்கர், முத்துராமலிங்கம் மற்றும் டிரைவர் இசக்கி பாண்டி ஆகியோர் மீது முன்னீர்பள்ளம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தங்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் சங்கர், முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், நீதி மன்றத்தில் அவர்கள் ஜாமீன் பெறவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது.