மாவோயிஸ்டுகள் தாக்குதல் எதிரொலி: பாஜகவின் சிறை நிரப்பும் போராட்டம் ஒத்திவைப்பு!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணி மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி 27 பேர் பலியானதைத் தொடர்ந்து இன்று முதல் நடைபெற இருந்த நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஒத்திவைத்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக மே 27-ந் தேதி முதல் ஜூன் 2 -ந் தேதி வரை நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணியின் மீது 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 27 பேர் பலியாகினர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று நடத்த திட்டமிட்டிருந்த மத்திய அரசுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஒத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்று வருகிறது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக மாவோயிஸ்ட்டுகளின் இந்த தாக்குதல் அமைந்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தால் இன்று முதல் நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.
சென்னை வரும் வருண் காந்தி
தமிழக பாஜக சார்பில் சென்னை அண்ணா சாலையில் வரும் 30ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வருண் காந்தி கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.