பின் வாங்கிய சீன படைகள் மீண்டும் இந்திய எல்லைக்குள் நுழைந்தன!
சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா - சீனா எல்லையில் லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன. சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி நின்றன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின.
இந்த நிலையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன - இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி, அத்துமீறி நுழைந்த பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன.
மீண்டும் ஊடுருவல்
இந்த நிலையில், சீன பிரதமர் இந்தியாவுக்கு வந்து சென்ற பின்னர் மீண்டும் சீன படைகள் வாலாட்ட தொடங்கி விட்டன. ஏற்கனவே ஊடுருவிய பகுதியில் இருந்து வாபஸ் பெற்றுச்சென்ற படைகள் மீண்டும் அதே லடாக் பகுதிக்குள் ஊடுருவி கேம்ப் அடித்துள்ளன.
அத்துடன் ‘ஸ்ரீஜாப்' பகுதியில் ‘பிங்கர்-8' என்ற இடத்தில் இருந்து ‘பிங்கர்-6' என்ற இடம்வரை 5 கி.மீட்டர் தூரத்துக்கு ‘மெட்டல்' சாலையையும் சீன படைகள் அமைத்து உள்ளன. இந்தப்பகுதி தங்கள் நாட்டு எல்லையுடன் சேர்ந்தது என்று சீனா கூறுகிறது. ஆனால், இது லடாக் பகுதியுடன் சேர்ந்த இந்தியப் பகுதிதான் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ரோந்துப் படைகள் தடுக்கப்பட்டன
இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் வழக்கமான ரோந்துப்பணிகள் மேற்கொள்ளும் இந்தோ- திபெத் எல்லைக் காவல் படையினர் நேற்று சீனா ஊடுருவிய பகுதியில் ரோந்துப் பணிக்காக சென்றனர். அவர்களை சீன படையினர் தடுத்து, திருப்பி அனுப்பி விட்டனர்.
வழக்கம் போல, இந்த முறையும் மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.