குருநாத் மெய்யப்பன் மீதான புகார்களை விசாரிக்க மூவர் குழு: சீனிவாசன்
ஆலோசனை
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களும் நாடு முழுவதும் புக்கிகளும் கைது செய்யப்பட்டனர். இதில் சிக்கிய பாலிவுட் நடிகர் வின்து அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பி.சி.சி.ஐ. அதிகாரிகளையும் ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா, துணைத் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோரையும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மூவர் கமிஷன்
பின்னர் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்ல. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே எனக்கு எதிராக பிசிசிஐ அமைப்பில் யாரும் போர்க்கொடி தூக்கவில்லை. என்னைப் பதவி விலகுமாறு யாரும் அச்சுறுத்தவோ, நெருக்கடி கொடுக்கவோ முடியாது. எனக்கு முழுமையான ஆதரவு இருக்கிறது. பி.சி.சி.ஐ.யில் உள்ள ஓர் உறுப்பினர் கூட என்னைப் பதவி விலகுமாறு கோரவில்லை. குருநாத் மெய்யப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷனின் இரண்டு உறுப்பினர்கள் ஐ.பி.எல். செயல்பாட்டுக் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மற்றொருவர் சுதந்திரமான உறுப்பினராக இருப்பார். இந்த செயல்பாட்டுக் கமிட்டியில் இப்போது அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா, சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் இருவர்தான் விசாரணைக் கமிஷனுக்கு நியமிக்கப்படுவார்கள். சில சுயநல சக்திகள் எங்களுக்கு எதிராக அவதூறுப் பிரசாரம் செய்கின்றன. தொலைக்காட்சிகள் உறுதிப்படுத்தாத செய்திகளையும் ஒளிபரப்புகின்றன என்றார் அவர்.