ஈரோடு அருகே விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலர் கைது
ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் வி.ஏ.ஓ.வை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கராபாளையம் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருபவர் திரவியக் கண்ணன். சங்கராபாளையம் 4வது வார்டு அதிமுக கவுன்சிலர் சக்திவேல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வி.ஏ.ஓ. திரவியக் கண்ணனிடம் கொடுத்துள்ளார்.
மனு கொடுத்துள்ளவர் வீட்டில் ஏற்கனவே ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே இவருக்கு சான்று வழங்க முடியாது என்று திரவியக் கண்ணன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வி.ஏ.ஓ. வெள்ளிதிருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.