உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையென்பது வேதனை தருகிறது… பதவி உயர்வு சர்ச்சையில் டி.எஸ்.பி வெள்ளைத்துரை
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கு அதிக சலுகை காட்டுவதாகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல்துறையில் உள்ளவர்களுக்கு அதிக சலுகை காட்டுவதாகவும் புகார் எழுவதுண்டு.
இந்த முறை அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் உரிய உயர்பதவிகள் வழங்கப்படவில்லை என்பது காவல்துறையினரின் புகார்.
போலீஸ் துறையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். எஸ்.ஐ ஆக பணியில் சேருபவர் அதிகபட்சம் மாவட்ட எஸ்.பி வரை பதவி உயர்வு பெற முடியும்.
ஆனால் தீவிரவாதிகளை கைது செய்வது, பயங்கர குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீசாருக்கு சிறப்பு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 1979ம் ஆண்டு எஸ்.ஐ ஆக பணியில் சேர்ந்தவர்கள் இப்போது டி.எஸ்.பியாக பதவி வகித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏ.டி.எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
ஆனால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் இந்த பதவி உயர்வில் வருவதால் 1979 பேச்சில் உள்ளவர்களுக்கு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அடுத்தமுறை அவர்களுடைய பேட்ச் பதவி உயர்வு வரும்போதுதான் வழங்கப்படும் என்று கூறப்படுவது நியாயமற்றது. வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் எஸ்.ஐ. வெள்ளைத்துரை, ஏட்டு சரவணன், போலீஸ் குமரேசன் ஆகியோர் கடைசி கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வீரப்பனை சுட்டு பிடித்ததால் அவர்களுக்கும் இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இவர்களில் வெள்ளைத்துரை டி.எஸ்.பியாகவும், சரவணன் இன்ஸ்பெக்டராகவும், குமரேசன் எஸ்.ஐ ஆகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. காரணம் சிறப்பு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பதவி உயர்வு செல்லுபடியாகும் என்று உயரதிகாரிகள் கூறுவதுதான்.
வெள்ளைத்துரையின் கீழ் இன்ஸ்பெக்ட்ராக பதவி வகித்தவர் தற்போது புரமோசனில் ஏ.டி.எஸ்.பி ஆக பதவி உயர்வு பெற உள்ளார். இது ஈகோ மோதலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திரன் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வீரப்பன் வேட்டை குழுவாக செயல்பட்டது. எனவே ஒருமுறை மட்டுமே பதவி உயர்வு வழங்க முடியும் என்று கூறப்பட்டது.
அதேசமயம் இமாம் அலி உள்ளிட்ட தீவிரவாதிகளை வேட்டையாடிய போலீசாருக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வீரப்பனை சுட்டுக் கொன்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் போலீசார்.
இது குறித்து வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட டி.எஸ்.பி வெள்ளைத்துரை கூறியதாவது:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதிலும் சிறப்பாக செயல்பட்டதாக எங்கள் மூவருக்கு மட்டுமே இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டது. இப்போது இதனை எதிர்க்கிறவர்கள் அன்றைக்கு வீரப்பனை தேடிச் சென்றபோது போலீஸ் அதிகாரி சீனிவாசனை வீரப்பன் சரணடைவதாக வரவழைத்து தலையை துண்டித்து கொலை செய்வது போல எங்களையும் கொன்றிருந்தால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்.
அது புரியாமல் எங்களின் பதவி உயர்வை கேவலப்படுத்துகின்றனர். நாங்கள் சிறப்பாக பணியாற்றியதற்கு அரசு கொடுத்த அங்கீகாரம் தவறு என்றால் அதை திரும்ப ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம்.
வேலையில் சேர்ந்தது முதல் அரசு என்ன சம்பளம் கொடுக்கிறதோ அதை வைத்துதான் குடும்பம் நடத்துகிறேன். கூடுதலாக ஒரு பைசா வாங்கியதாக சொன்னால் அரசு எடுக்கும் நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறேன். உழைத்ததற்கு அங்கீகாரம் இல்லாதது வேதனையளிக்கிறது என்றார்.
தற்போது வெள்ளைத்துரை டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று 8 ஆண்டுகள் ஆகிறது. 5 ஆண்டுகள் பணிபுரிந்தாலே ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு தரவேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கவேண்டும். அரசு பாராமுகமாக இருப்பதால் இதுபோன்று சிறப்பாக பணியாற்றிய பல காவல்துறை அதிகாரிகள் வேதனையில் உள்ளதாக கூறப்படுகிறது.