'ஆனா'வுக்கு எதிராக திரளும் 'கானா': நெல்லை திமுகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்
நெல்லை: முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையிலான 7 பேர் கொண்ட அணியினர் தான் ரசீது புத்தகம் இல்லாமல் ரூ.50 லட்சம் தேர்தல் நிதி வசூலித்தனர். தேர்தல் நிதி அளித்ததில் தவறு நடந்திருந்தால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்று கொள்ள தயார் என நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நெலலை மாவட்டத்தில் 43 ஆண்டுகால முழு நேர பொது வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். எந்த தலைமையை ஏற்றாலும் எனது அரசியல் நாணயத்திற்கும், கட்சியின் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் விசுவாசமாக செயல்பட்டுள்ளேன். அரசியலில் எனது உழைப்பு, நேர்மை, தியாகம் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் தெரியும்.
நேற்று காலை பத்திரிக்கைகளில் வந்த செய்திக்காக தன்னிலை விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் நிதியளிப்பு கூட்டம் சம்பந்தமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தபோது கட்சியால் நெல்லை மாவட்டத்திற்கு நிர்மணிக்கப்பட்ட தொகை ரூ.2 கோடி. அதற்கு கட்சியில் ரசிது புத்தகம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் எம்எல்ஏ, மைதீன்கான், முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உள்ளிட்ட 7 பேர் ஒரு அணியாக செயல்படுவதாக கூறி அவர்களே ஒப்புக்கொண்டு 7 பேர் சேர்ந்து 50 லட்ச ரூபாய் பிரித்து தருவதாக ரசிது புத்தகம் கேட்டனர். இந்த 50 லட்சத்திற்கும் கட்சியில் இருந்து ரசிது புத்தகம் வழங்கப்பட்டது.
இதுபற்றிய முழு விபரமும் கட்சிக்கு தெரியும்.
7 பேர் அணியினர் ரசிது புத்தகம் இல்லாமலும், ரூ.50 லட்சம் பிரித்து கட்சியிடம் ஓப்படைத்தனர். அதற்கு இன்னும் ரசிது வழங்கப்படவில்லை. தேர்தல் நிதியில் நான் தவறு செய்திருந்தால் தலைமை தண்டனை கொடுக்கட்டும். நான் அதை தலை வணங்கி ஏற்கிறேன்.
தென்காசியில் நடந்த கூட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ.3 கோடி தேர்தல் நிதி வழங்கப்பட்டது. எனவே கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று கொண்டு கழக பணி ஆற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே கானா அணி,ஆனா அணி என்று இரு அணிகள் இருந்து வருகிறது.இது தலைமைக்கும் தெரியும்.இப்போது இந்த அணிகளுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.நெல்லை திமுகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டதை எட்டி வருவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.