மதுரையை கலக்கி வந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேர் கைது!
மதுரை: மதுரையை கலக்கி வந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மற்றும் சுற்றியுள்ள ஏ.டி.எம்., மையங்களில் அடிக்கடி போலி கார்டுகள் மூலம் பணம் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, மதுரை கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ரவியிடம் தலைமையில் ஏ.டி.ஏம்., திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர முயற்சியால் மதுரையை சேர்ந்த பாலாஜி, பாலமுருகன், சுரேஷ் பாண்டியன், மதன்மீரான் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் ஏ.டி.ஏம்., மற்றும் பின் நம்பர்களை பெற்று போலி கார்டுகள் தயாரித்து, அவற்றை ஏ.டி.எம்., மையங்களில் பயன்படுத்தி பணத்தை கொள்ளை அடித்து தெரிய வந்தது. இவர்கள் இது போன்று போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி, பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர்.
இவர்கள் ஏ.டி.எம். களில் எடுக்கும் பணத்தில் 10 சதவிதத்தை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை, மதுரையில் தலைமையாக செயல்படும் முகம் தெரியாத ஒரு நபர், மொபைலில் தெரிவிக்கும் குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு வந்து சென்றுவிடுவார்களாம்.
எந்தெந்த ஏ.டி.எம்.களில் என்ன தேதியில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதையும், அந்த மர்ம நபர் இவர்களுக்கு மொபைல்மூலம் தகவல் தெரிவிப்பாராம். அதன் மூலம் இவர்கள் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கைது செசய்யப்பட்ட நபர்களிடம் இருந்து லேப் டாப், எட்டு மொபைல் போன்கள், 269 போலி ஏ.டி.எம்., கார்டுகள், போலி ஏ.டி.எம்., கார்டுகளை தயாரிக்க பயன்படுத்திய சிம்மர் மிஷன், நான்கு லட்சத்து நான்காயிரத்து 65 ரூபாய், மூன்று பைக்குகள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளையர்களுடன் தொடர்புடையர்கள் யார் ? யார் ? அவர்கள் எங்கு உள்ளனர், என போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என கூறப்படுகின்றது.