''ஒருமுகம், ரெண்டு முகம், மூன்று முகம்.. ஆம்புலன்ஸில் பிறந்த சிம்பு மகன் பேரு 108 முகம்''
தேனி: 108 ஆம்புலன்ஸ்-ல் பிறந்த குழந்தைக்கு ‘108 முகம்' என்று பெயரிடப்பட்டனர் பெற்றோர்.
தேனி அருகே உள்ள சொக்கத்தேவன் பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன், நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி திவ்யாவை பிரசவத்திற்காக சின்னமனூர் மருத்துவமனையில் சேர்த்தார்.
திடீரென திவ்யாவிற்கு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர் 108 அரசு ஆம்புலன்ஸ்-ல் தேனி அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் சிறிது தூரம் தான் கடந்திருக்கும், அதற்குள் திவ்யாவிற்கு பிரசவவலி அதிகமாகி, 2 கிலோ 90 கிராம் எடையில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.
தம்பதியினர் ஆண்குழந்தை பிறந்தால், ஆறுமுகம் என பெயர் வைக்க ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தனராம். தற்போது, 108 ஆம்புலன்ஸ்-ல் குழந்தை பிறந்ததால், ‘108 முகம்' என பெயரை குழந்தைக்கு வைத்து விட்டனர்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ‘108 முகம்' என காதில் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.