சேலத்தில் சாகசத்திற்கு பரிசாக இளைஞர் கைது: பாம்பு விடுதலை
சேலம்:பாம்புகளை வைத்து சாகசம் நிகழ்த்திய இளைஞரை கைது செய்தனர் வனத்துறையினர். பாம்புகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை பத்திரமாக காட்டிற்குள் விட்டனர்.
சேலம் அம்மாப்பேட்டை சிவாஜி நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் ஒருவர் பாம்புகளை வைத்து சாகச நிகழ்ச்சி நடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சேலம் தெற்கு வனச்சரகர் சிவகுமார், வனவர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், தகவல் உண்மை என தெரிய வந்தது. பாம்புகளை வைத்து நடனமாடிக் கொண்டிருந்த மரவனேரி கே.ஏ.எஸ். நகரைச் சேர்ந்த ஜே.பிரேம்குமார் (27) என்பவரை வனத்துரையினர் வளைத்துப் பிடித்தனர். அவரிடம் இருந்து மலைப் பாம்பு, சாரைப் பாம்பு, நாகப் பாம்பு என நான்கு பாம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட பாம்புகள், வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அட்டவணையில் இடம் பெற்றுள்ளன என்பது தெரிய வந்தது.இந்த வகை பாம்புகள் காட்டில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த பாம்புகளை யாரும் பிடிக்கவோ, வீட்டில் வைத்திருக்கவோ, சாகச நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்.
இதனால், சட்டத்திற்கு புறம்பாக பாம்புகளை வைத்திருந்த குற்றத்திற்காக பிரேம்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர். பிரேம் குமார் வைத்திருந்த பாம்புகளை வனவர் வி.பி.சுப்பிரமணியம், காப்பாளர்கள் சி.ராஜகோபால், சி.கோபி ஆகியோர் ஏற்காடு மலைப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.