’மாருதி சுசுகி’ இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்த பெயர்: ஜப்பானில் மன்மோகன் சிங் பெருமிதம்
3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், நேற்று டோக்கியோவில் கெய்தான்ரன் என்னும் தொழில், வர்த்தக சபையில் ஜப்பான் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது:-
நமது மக்கள் அதிவேக வளர்ச்சியின் பயன்களை ருசி பார்த்துள்ளனர். அவர்கள் குறைவான வளர்ச்சியில் திருப்தி அடைய மாட்டார்கள். எங்கள் அரசாங்கம் கடினமாக உழைக்கவும், நீண்டகால பொருளாதார நலனை கருத்தில் கொண்டு கடினமான முடிவுகளை எடுக்கவும் உறுதி பூண்டுள்ளது.
இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே வரி சக்தியை சரண் அடையச் செய்வதில் மாநில அரசுகளை ஒன்றிணைத்து கொண்டு வருவதில் சிரமங்கள் உள்ளன. ஆனால் இந்த தடைகளை கடந்து வந்து விடலாம் என நான் நம்புகிறேன். எனவே சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறை 2014-ம் ஆண்டில் சரியான விதத்தில் அமல்படுத்தப்படும்.
இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததின் விளைவாக, நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஆண்டை விட அதிக பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். ஏறத்தாழ 6 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2014-15 நிதி ஆண்டில் இன்னும் சிறப்பான வளர்ச்சி அடைய முடியும்.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் இந்திய தொழில் துறை நவீனமயமாக்கலில் ஜப்பானுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியாவில் மாருதி சுசுகி என்ற பெயர் எல்லோரும் அறிந்த பெயராகி இருக்கிறது. இந்தியாவில் தரமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது ஒன்று மட்டுமே போட்டியிடுவதில் மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது. எனவேதான் இந்தியாவில் 12-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஒரு டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.55 லட்சம் கோடி) உள்கட்டமைப்பு வசதிக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாதித்தொகையை தனியார் துறையிடமிருந்தும், அரசு-தனியார் துறை கூட்டு அமைப்புகளிடமிருந்தும் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய முதலீடுகளில் ஜப்பான் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கும் என நான் நம்புகிறேன். சென்னை-பெங்களூர் தொழில் மேம்பாட்டு சாலை, எதிர்காலத்தில் ஜப்பான் தொழில் ஒத்துழைப்பில் முக்கிய கவனத்தைப் பெறும் என நம்புகிறேன். எரிசக்தி பாதுகாப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவும், ஜப்பானும் பேசி வருகின்றன. சூரிய ஒளி மின்சக்தி, தூய்மையான நிலக்கரி தொழில் நுட்பம், பழுப்பு நிலக்கரி தரம் உயர்த்துதல் துறைகளில் ஜப்பானிய முதலீடுகளை வரவேற்கிறோம் என இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்..