முட்டாள் தனமான நடவடிக்கைகளால் அழிவின் பிடியில் பாரதீய ஜனதா : ராம் ஜெத்மலானி எச்சரிக்கை
டெல்லி: தன் மீது எடுத்துள்ள இந்த முட்டாள் தனமான நடவடிக்கையால் பாரதீய ஜனதா அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும், இதனால் அவர்கள் பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறார்கள் என்றும் ராம் ஜெத்மலானி எச்சரித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞரும், பாரதீய ஜனதா எம்பியுமான ராம் ஜெத்மலானி ஆறு ஆண்டுகள் கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக நேற்று, திடீரென பாரதீய ஜனதா அறிவித்தது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சியின் தலைமையை விமர்சித்ததற்காகவும் இந்த தண்டனை என, பாரதீய ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராம் ஜெத்மலானி பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதீய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம்.
அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை. நான் தொடங்கிய கருப்பு பண விவகார பிரச்சாரம் அவர்களை வெட்கப்பட வைத்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வரக்கோரி காங்கிரசுக்கு எதிரான எனது கோரிக்கைகளுக்கு கட்சியிலே ஆதரவு இல்லை.
மேலும் என் மீது எடுத்துள்ள இந்த முட்டாள் தனமான நடவடிக்கையால் பாரதீய ஜனதா அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் அவர்கள் பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறார்கள்' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்