'டெல்லி மருமகனுக்கு' ஒன்னும் ஆகலைனா என் மருமகனுக்கும் ஒன்னும் ஆகாது: சீனிவாசன் நம்பிக்கை
ஐபிஎல் பெட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளார். இதையடுத்து சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என்று நினைத்த சீனிவாசனின் முடிவை மாற்றியது பெங்காள் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜக்மோகன் டால்மியா தானாம். கடந்த சனிக்கிழமை நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் டால்மியா சீனிவாசனிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வெளியே உள்ளவர்கள் தான் உங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அதனால் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்தே நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சீனிவாசன் தொடர்ந்து தெரிவித்து வருகிறாராம்.
தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்து கொண்ட சீனிவாசன் வாரிய உறுப்பினர் ஒருவரிடம், டெல்லி மருமகனுக்கு ஒன்றும் ஆகவில்லை எனில் என் மருமகனுக்கு ஒன்றும் ஆகாது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராப்ர்ட் வாத்ரா தனக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து நிதி விஷயங்களில் லாபம் அடைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனிவாசனை ராஜினாமா செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.