ஒசாமாவை அமெரிக்கப்படை கொல்லவில்லை, ஒபாமா ரீல் விடுகிறார்: மாஜி பாடிகார்டு
பாகிஸ்தானின் அப்போத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் கடலில் வீசப்பட்டது.
இந்நிலையில் ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ்(57) கூறுகையில்,
ஒசாமாவை அமெரிக்கப்படைகள் ஒன்றும் கொல்லவில்லை. அமெரிக்கப் படைகள் காம்பவுண்டுக்குள் புகுந்து அவரின் காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றன. மேலும் ஒசாமாவின் தொடையில் சுட்டனர். உடனே ஒசாமா தன் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார். இந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கு இல்லை. அவரின் உறவினர்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.
அமெரிக்க படைகள் அவரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இறந்தபிறகு அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டது. ஒசாமா உடலை கடலில் புதைத்தாகக் கூறுவதில் உண்மையில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா பொய் சொல்லியுள்ளார். அமெரிக்கப்படைகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒசாமா 10 ஆண்டுகளாக தனது இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டை கட்டிக் கொண்டு திரிந்தார் என்றார்.