மெய்யப்பன் விவகாரம் - பிசிசிஐ விசாரணைக் குழு அறிவிப்பு - சீனிவாசன் நிறுவனமும் விசாரிக்கப்படும்!
டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கமிஷனின் உறுப்பினர்களை வாரியம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்தொடர்பாக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீ்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து சீனிவாசனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து குருநாத் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்படும் என்று சீனிவாசன் அறிவித்தார். இந்தக் குழுவில் ரவி சாஸ்திரி இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தற்போது சாஸ்திரி இடம் பெறவில்ல. மாறாக வேறு 3 பேர் கொண்ட குழுவை வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்வாரிய செயலாளர் சஞ்சய் ஜெகாதாலே, கர்நாடக மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய ஜெயராம் செளதா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிஷன், குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கும். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளரான ஜெய்ப்பூர் ஐபிஎல் பிரைவேட் லிமிட்டெட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 3 பேர் கமிஷனின் விசாரணை தொடங்கும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.