என் கருத்தையே சுக்லா சொன்னார்.. விசாரணையில் இருந்து விலகி இருக்கிறேன்- இது 'சீ'னி' வெடி!
ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து பிசிசிஐ தலைவராக இருக்கும் அவரது மாமனார் சீனிவாசன் பதவி விலகியாக வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா இன்று பிசிசிஐ துணைத் தலைவர் ஜேட்லியை சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை முடியும் வரை அவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியிருந்தது.
இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், ராஜிவ் சுக்லா கடைசியாக கொடுத்த பேட்டியைப் பார்த்தேன். கொல்கத்தாவில் நான் என்ன சொன்னேனோ அதையே அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். விசாரணையில் இருந்தும் விசாரணைக் குழு நியமனத்தில் இருந்தும் நான் விலகியே இருக்கிறேன். அதைத்தான் சுக்லாவும் இப்போது சொல்லியிருக்கிறார். அதேபோல் விசாரணைக் கமிஷன் சுதந்திரமானது. 2 நீதிபதிகள், பிசிசிஐ செயலர் இந்த கமிஷன் உறுப்பினர்களாக இருப்பார்கள். விசாரணைக் கமிஷனின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதைத் தவிர நான் சொல்வதற்கு இல்லை என்றார் அவர்.
ராஜிவ் சுக்லாவோ, விசாரணை முடியும் வரை சீனிவாசன் தாமாக விலகி இருக்க வேண்டும் என்று பதவி விலகல் பற்றி கூறியிருந்தார். ஆனால் சீனிவாசனோ விசாரணையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ராஜிவ் சுக்லா சொல்வதும் என் கருத்தே என்று புதிய கருத்தாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.