திருச்சி ஏர்போர்ட்டில் மர்ம சூட்கேஸால் வெடிகுண்டு பீதி: பரபரப்பு
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஆளில்லாமல் தனியாகக் கிடந்த மர்ம சூட்கேஸால் வெடிகுண்டு பீதி கிளம்பியது.
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை வாகனங்களில் ஏற்றி, இறக்கும் இடத்தில் நடைபாதை அருகே ஒரு டிராலியில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று நேற்று கிடந்தது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஒரு வேளை அந்த சூட்கேஸில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து சூட்கேஸ் அருகில் விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். உடனே இது குறித்து மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் கருவிகளுடன் விமான நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சூட்கேஸில் ஒரு நைலான் கயிறை கட்டி 30 அடி தூரத்தில் நின்று கொண்டு அதை இழுத்தனர். அப்போது சூட்கேஸ் திறந்து அதில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அதில் வெடிகுண்டு எதுவும் இல்லாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
சூட்கேஸில் பேன்ட், சட்டை, பழைய மற்றும் புதிய பாஸ்போர்ட், செல்போன், டைரி, வெளிநாட்டு சாக்லேட்டுகள், பர்ஸ் மற்றும் சாமிப் படங்கள் இருந்தன. பர்ஸில் ரூ.1,205 ரொக்கம் இருந்தது.
பாஸ்போர்ட்டில் மதுரை மாவட்டம், திருநகர், முத்துப்பாண்டியன் தெருவைச் சேர்ந்த தங்கவேலு மகன் பாலமுருகன் (40) என்று இருந்தது. சூட்கேஸில் இருந்த டைரியில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது தான் காலையில் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்தததாகவும், அப்போது சூட்கேஸை மறந்துவிட்டு வந்ததாகவும் பாலமுருகன் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சூட்கேஸை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினர்.