ராஜிவ் கொலை வழக்கில் மறுவிசாரணை ஜூன் 5-க்குள் சிபிஐ, வெளியுறவுத்துறை பதிலளிக்க கோர்ட் நோட்டீஸ்!
ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தூக்குக் கொட்டடியில் இருக்கின்றனர். அவர்களது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று ஒரு பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். அதில், ராஜிவ் படுகொலை தொடர்பான சில வீடியோக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் விசாரணை அதிகாரி ரகோத்தமன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இப்படி சில வீடியோ காட்சிகள் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படாத நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குக் கொட்டடியில் இருக்கின்றனர். இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த் வழக்கில் மீண்டும் மறுவிசாரணை நடத்தி புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இது தொடர்பாக ஜூன் 5-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் சிபிஐ துணை இயக்குநர், ரா இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.