சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் கைது ஏன்? பின்னணி தகவல்கள்
போயஸ் தோட்டத்தில் இருந்து சில காலம் சசிகலா வெளியேற்றப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது அவரது ஒட்டுமொத்த உறவுகளுமே கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் மீண்டும் சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வந்து இப்போது கை ஓங்கிய நிலையில் இருக்கிறார். ஆனால் அவரது சகோதரர் திவாகரன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகனும் அதிமுகவின் இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் அமைப்பின் முன்னாள் செயலருமான டாக்டர் வெங்கடேஷ் திடீரென நில மோசடிப் புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானலில் கைதுக்கான சுழி
அண்மையில் கொடைக்கானல் நகராட்சி சேர்மனாக இருந்த கோவிந்தன் என்பவர் அதிமுகவின் நகரச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதற்குக் காரணம் அவர் மீது ஏராளமான புகார்கள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அண்மையில் கொடைக்கானலுக்குப் போன டாக்டர் வெங்கடேஷ், சசிகலா கணவர் நடராஜனின் தம்பி ராமலிங்கம் ஆகியோரை தடபுடலாக வரவேற்று உபசித்திருக்கிறார் கோவிந்தன். புகார்கள் ஒருபுறமிருக்க வெங்க்டேஷ் குடும்பத்தினருடன் கோவிந்தன் நெருக்கம் காட்டியதே அவருக்கு கல்தா கொடுக்கக் காரணம் என சொல்லப்படுகிறது. இங்குதான் வெங்கடேஷ் கைதுக்கு சுழியும் போடப்பட்டிருக்கிறது..
சென்னையிலிருந்து திருவாரூர்
கோவிந்தனுடன் நெருக்கமாக இருந்ததற்காக டாக்டர் வெங்கடேஷை ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்ய சென்னை போலீசார் முடிவு செய்தனர். இந்த தகவலைக் கேள்விபட்ட டாக்டர் வெங்கடேஷ், சென்னையிலிருந்து திருவாரூக்கு எஸ்கேப் ஆனார்.
திருவாரூரிலிருந்து சென்னைக்கு..
இதைத் தொடர்ந்து டாக்டர் வெங்கடேஷை துரத்திக் கொண்டு சென்னை போலீசார் திருவாரூக்கு சென்றனர். ஆனால் டாக்டர் வெங்கடேஷ் மீண்டும் சென்னைக்கே திரும்பிவிட கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஓராண்டுக்கு முந்தைய புகார்- சென்னையில் கைது
நேற்று இந்த கண்ணாமூச்சி விளையாட்டு டாக்டர் வெங்கடேஷின் கைதுடன் முடிவுக்கு வந்தது. தஞ்சாவூரில் டாக்டர் வெங்கடேஷின் பக்கத்து வீட்டுக்காரர் விஸ்வநாத் என்பவரை மிரட்டு அவரது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார் என்பது வெங்கடேஷ் மீதான புகார். இது ஓராண்டுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகார். இந்தப் புகாரில் சென்னையில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கொடைக்கானல் கோவிந்தனும் சிக்குகிறார்?
டாக்டர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நண்பரான கொடைக்கானல் கோவிந்தன் கைது செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் டாக்டர் வெங்கடேஷ் மீது மேலும் சில வழக்குகள் அடுத்தடுத்து பாயலாம் எனத் தெரிகிறது.