ஜப்பானிய தமிழ் அறிஞர் கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருது: மன்மோகன் வழங்கினார்
டோக்கியோ: ஜப்பானிய தமிழ் அறிஞர் நொபோரு கராஷிமாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.
ஜப்பானைச் சேர்ந்தவர் நொபோரு கராஷிமா(80). தமிழ் அறிஞர். அவர் தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். அழகுத் தமிழில் சரளமாக பேசும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ் ஆய்வு மேற்கொண்டார்.
அவரின் தமிழ் சேவையை பாராட்டும் விதமாக அவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கராஷிமா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை.
ஜப்பானில் பத்மஸ்ரீ
3 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்.
டோக்கியோவில் விழா
டோக்கியோவில் உள்ள ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நேற்று நடந்த விழாவில் கராஷிமாவுக்கு விருது வழங்கப்பட்டது.
கௌரவ பேராசிரியர்
1964ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் தனது கல்விப் பணியைத் துவங்கினார் கராஷிமா. கடந்த 1974ம் ஆண்டு தெற்காசிய வரலாற்று துறை தலைமை பேராசிரியராகி 20 ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார் கராஷிமா.