ரோமிங் விதிமீறல்: ஏர்டெல் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறை ரூ.650 கோடி அபராதம்
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரோமிங் சேவை உரிமம் தொடர்பான ஒப்பந்தத்தை 2003 மற்றம் 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மீறியது. இது குறித்து தொலைத்தொடர்புத்துறை ஏர்டெல் நிறுவனத்திற்கு அப்போதே நோட்டீஸ் அனுப்பியதே தவிர அபராதம் விதிக்கவில்லை. ஆனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்று பாரதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எல்.டி.(Subscriber Local Dialling) சேவை வழங்கியதற்காக அதற்கு எதிராக தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த சேவை மூலம் மும்பையில் உள்ள ஒருவர் டெல்லிக்கு லோக்கல் கால் செய்ய முடியும். ஆனால் மும்பையில் இருந்து டெல்லிக்கு எஸ்டிடி கால் தான் செய்ய முடியும். ஏர்டெல்லின் விதிமீறலால் வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
கடந்த 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி எஸ்எல்டி சேவையை நிறுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை பாரதி நிறுவனத்தை கேட்டுக் கொண்டது. ஆனால் பாரதியோ 2005ம் ஆண்டு வரை எஸ்.எல்.டி. சேவையைத் தொடர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் விதிப்பது என்பதை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. விதிமீறல் நடந்த 13 வட்டங்களுக்கும் தலா ரூ.50 கோடி அபராதம் விதிக்க அந்த குழு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஏற்றார். அபராதம் விதிக்கப்பட உள்ள 13 வட்டங்களில் சென்னை மற்றும் தமிழ்நாடு ஆகிய 2 வட்டங்கள் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி ஒரே வட்டமாக இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விதிமீறல் நடந்தபோது சென்னை மற்றும் தமிழ்நாடு தனித்தனி வட்டமாக இருந்ததனால் 13 வட்டங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆக மொத்தம் ரூ.650 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.