இந்திய அமைதிப் படைக்கு இறைச்சி அனுப்பியதில் முறைகேடு: 2 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை!
சென்னை: இலங்கையில் யுத்தமே முடிந்துவிட்டது.. ஆனால் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை சென்ற போது ராணுவத்தினருக்கு இறைச்சி அனுப்பியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்றுதான் தீர்ப்பளிக்கப்பட்டு 2 ராணுவ அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1987-ம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து டின் இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய அதிகாரியாக ஏ.கே.குப்தா பணியாற்றினார். எஸ்.எஸ்.காடியான் என்ற ராணுவ அதிகாரி மர்கோவாவில் பணியாற்றினார்.
அமைதிப்படைக்குத் தேவையான டின் இறைச்சியை மர்கோவாவில் உள்ள கோஸ்டா என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து இவர்கள் வாங்கினர். இதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதுதொடர்பாக இவர்கள் மீது 10.12.90 அன்று சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குப்தா, காடியன், கோஸ்டா நிறுவனம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி கே. பரமராஜ் நேற்று தீர்ப்பளித்தார். இதில் குப்தாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், காடியனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கோஸ்டா கம்பெனிக்கு ரூ.61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.