ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சசிகலாவுடன் ஜெ. பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்
திருச்சி: திருச்சி வந்த முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பி்டடார். அவருக்கு கோவில் வாசலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை நாலரை மணியளவில் திருச்சி வந்த முதல்வருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டார் ஜெயலலிதா. கோவில் வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பேட்டரி காரில் பயணித்த ஜெயலலிதா, கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஆரியபட்டாள் வாசல் அருகே பேட்டரி காரில் இருந்து இறங்கி மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார்.
பெருமாளை தரிசனம் செய்த பின்னர் மீண்டும் ஆரியபட்டாள் வாசலில் இருந்து பேட்டரி கார் மூலம் தாயார் சன்னதிக்கு சென்று தாயாரை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நந்தவனம் தோப்பு வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு வந்தார். அங்கு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்த பின்னர் உடையவர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார்.