வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவுக்கு ஜூன் 12ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
காஞ்சிபுரம்: வன்னியர் சங்கத் தலைவரும் பாமக சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவுக்கு நீதிமன்றம் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அருகே பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் காடுவெட்டி குரு தமிழக முதல்வர் ஜெயலிலதாவைப் பற்றி அவதூறாக பேசியதாக தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த காடுவெட்டி குருவை காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் ஏப்ரல் 30ம் தேதி கைது செய்தனர்.
மேலும், காடுவெட்டி குரு மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் கடந்த 10ம் தேதி தேசிய தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், காடுவெட்டி குருவை போலீசார் கடந்த 17ம் தேதி மீண்டும் திருக்கழுக்குன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது குருவிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் அவரை மே 29ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டனர். அதன்படி நேற்று காடுவெட்டி குருவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காடுவெட்டி குருவுக்கு வரும் ஜூன் 12ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.