ஒன்இந்தியா தமிழ் செய்தி எதிரொலி- டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட கரூர் கலெக்டர்!
கரூர்: கரூர் மாரியம்மன் திருவிழாவுக்காக தற்காலிகமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூட கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டார்.
ஒன்இந்தியா தமிழ் இணயைதளம் இதுதொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக கலெக்டர் ஜெயந்தி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். மேலும் இந்தக் கடையைத் திறக்க உத்தரவிட்ட அதிகாரிகளுக்கும் நல்ல டோஸ் கிடைத்ததாம்.
தமிழகத்தில் புகழ் பெற்ற திருவிழாக்களில் கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவின் போது, பொது மக்களை மகிழ்ச்சி படுத்த தனியார் சார்பில் சிறு அளவில் தற்காலிக பொழுதுபோக்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக அரசு பசுபதிபாளையம் பாலம் அருகில் தற்காலிக டாஸ்மாக் கடையை திறந்து வைத்து குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
கோவிலுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளே இருக்கக் கூடாது என்பது தமிழக அரசின் உத்தரவு. ஆனால் கோவில் திருவிழாவில் டாஸ்மாக் கடையை திறந்து வைத்து திடீர் புரட்சி செய்தது தமிழக அரசு.
தற்காலிக டாஸ்மாக் கடைகள் அமைப்பதால் மது குடித்துவிட்டு ஆட்டம் போடும் குடிகாரர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், பெண்கள் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும் என்றும் பலரும் அச்சப்பட்டனர்.
தமிழக அரசின் இந்த செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய செயலாளரும், தமிழக ஒருங்கிணைப்பாளருமான கிறிஸ்டினா சாமி மற்றும் தமிழக மருத்துவர் பேரவை மாநில தலைவர் காளிமுத்து ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்ற செய்தி ஒன் இந்தியா தமிழ் செய்தி இணையதளத்தில் வெளியானது.
இது கலெக்டர் ஜெயந்தியின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த கலெக்டர் ஜெயந்தி, கரூர் தாசில்தார் பாலசுப்பிரணி ஆகியோர் சம்பவத்தை இடத்தை ஆய்வு செய்தனர்.
அங்கு தற்காலிகமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு வராமல் தற்காலிக டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்ட டாஸ்மாக் அதிகாரி மீது உரிய நவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.
உண்மைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து, பொது மக்கள் நலன் மீது அக்கரை செலுத்திய கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்திக்கு பொது மக்கள் மனதார பாராட்டினர்.