சொத்து தகராறு: திருச்சியில் தம்பியை கட்டையால் அடித்துக் கொன்று உடலை எரித்த அண்ணன்கள்
திருச்சி: திருச்சியில் சொத்து தகராறில் உடன் பிறந்த தம்பியை அண்ணன்கள் சேர்ந்து கொலை செய்து அவரை உடலை எரித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் பளிங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை. அவரது மகன்கள் ரவி, இளந்தென்றல் மற்றும் ஓவியம். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடைசி மகன் ஓவியத்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரின் மனைவி கீதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் பிச்சை பிள்ளைக்கு சொந்தமான இடத்தில் ரவி அரசின் தொகுப்பு வீடு கட்டி நேற்று கிரஹப்பிரவேசம் நடத்தினார். விசேஷத்திற்கு வந்த ஓவியம் இந்த இடத்தில் தனக்கும் பங்கு உள்ளது என்றும், அப்படி இருக்கையில் ரவி மட்டும் எப்படி வீடு கட்டலாம் என்றும் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது விசேஷத்திற்கு வந்திருந்தவர்கள் ஓவியத்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று மாலை 5 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ஓவியம் நின்று கொண்டிருந்தார். அப்போது ரவி, இளந்தென்றல் ஆகியோர் அங்கு வந்து ஓவியத்தை கட்டையால் அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரவியும், இளந்தென்றலும் சேர்ந்து தங்கள் தம்பியின் உடலை சுடுகாட்டுக்கு தூக்கிச் சென்று மாலை 6.30 மணி அளவில் கட்டைகளை அடுக்கி அவரது உடலுக்கு தீ வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பளிங்காநத்தம் வி.ஏ.ஓ. ராஜராஜன் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த ஓவியத்தின் உடலில் தண்ணீர் ஊற்றினர். பாதி எரிந்த உடலை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவி மற்றும் இளந்தென்றல் ஆகியோரை தேடி வருகின்றனர்.