எனக்குத்தான் ராஜ்யசபா சீட் தா.பா. அடம்! நாளை கூடுகிறது இ.கம்யூ. நிர்வாகக் குழு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவின் ராஜ்யசபா எம்.பி. பதவிக் காலம் முடிவடைய இருக்கிறது. இதனால் அதிமுக ஆதரவுடன் அவரை மீண்டும் எம்.பி.யாக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது. ஆனால் மாநில செயலராக இருக்கும் தா. பாண்டியனோ, அதெல்லாம் முடியாது எனக்குத்தான் எம்.பி. பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.
சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்..ஏக்களும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும் இருக்கின்றனர். இருப்பினும் 16 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் அக்கட்சிக்கு ஒரு எம்.பி.சீட் கிடைக்கும். அது நிச்சயமாக அதிமுக ஆதரவுடன்தான் சாத்தியமாகும். இதற்காக ஜெயலலிதாவை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பரதன் திட்டமிட்டிருந்தார். ஜெயலலிதாவை பரதன் சந்தித்தால் அவர் டி.ராஜாவுக்குத்தான் ஆதரவு கோருவார். அதனால் ஜெயலலிதாவிடம் நேரம் வாங்கித் தராமல் டேக்கா கொடுத்துவிட்டு தா.பாண்டியன் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் ஜெயலலிதாவுடனான பரதன் சந்திப்பு நடைபெறவில்லை. எப்படியும் தம்மை ஜெயலலிதா ஆதரிப்பார் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிறார் தா.பாண்டியன்!
இந்த நிலையில்தான் நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்பது தீர்மானிக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை ஜூன் 2-ந் தேதி டெல்லியில் நடைபெறும் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் ஏற்று அறிவிப்பு வெளியிட இருக்கிறது.
இதனால் நாளைய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.