இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி: 10 ஆண்டுகளில் 17.7% அதிகரிப்பு
டெல்லி: நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக (1,21,05,69,573) அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி (62,31,21,843). பெண்களின் எண்ணிக்கை 58.7 கோடியாகுமம் (58,74,47,730). இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத அதிகரிப்பாகும்.
தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
2001 முதல் 2011ம் வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இதில் ஆண், பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக தலா 9 கோடி அதிகரித்துள்ளது.
நாட்டில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 68.8 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளிலும் 31.2 சதவீதம் பேர் நகர் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
நாட்டில் 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 949 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 929 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 923 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 905 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
தேசிய அளவில் கல்வியறிவு பெற்றோரின் அளவு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 80.9 சதவீதமும், பெண்கள் 64.6 சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.