அமைச்சரவையை மாத்தினாலும் மாத்துவேன்- பிரதமர் சூசகம்
டெல்லி: அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக கூறியுள்ளார்.
ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் தாயகம் திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவையில் சில இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
சமீபத்தில் அமைச்சர்கள் பவன் குமார் பன்சால், அஸ்வனி குமார் ஆகியோர் பல்வேறு புகார்களைத் தொடர்ந்து பதவி விலகியது நினைவிருக்கலாம். இந்த இடங்கள் நிரப்பபப்ட வேண்டியுள்ளது. ரயில்வே அமைச்சராக இருந்த பன்சால், அவரது உறவினர் மீதான ஊழல் புகாரைத் தொடர்ந்து விலகினார். நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பான சிபிஐ அறிக்கையைத் திருத்தியதைத் தொடர்ந்து சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமார் விலகினார்.
ரயில்வே துறை தற்போது தற்காலிகமாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி.பி.ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல ச ட்டத் துறை, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது போல ஏற்கனவே பல அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமந்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.